ஒரு திரைப்படம் எப்படி இருக்க வேண்டும்?P.C.Sriram சொன்னதாக நினைவு, “ஒரு நல்ல திரைப்படம் உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்ய வேண்டும்”.
விகடனில் வந்த தொடர்களில் கற்றதும் பெற்றதும்,ஓ பக்கங்கள் வரிசையில் பிடித்தது செழியனின் உலக சினிமா.நிறைய நல்ல படங்களைப்பற்றி சொல்லி இருப்பார்.அதில் நான் குறித்து வைத்துக்கொண்டவை ET-Extra terrestrial,Run Lola Run மற்றும் The Birds.இதில் ஈடி சென்ற வாரம்தான் பார்க்க கொடுத்து வைத்திருந்தது.நிற்க.அந்த தொடர் வந்து நிறைய நாட்களாச்சே என்பவர்கள் சில மாதங்களாகவே நான் GirlFlicksManiaவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.கூகிளில் சிறந்த GirlFlicksஐ தேடி தரவிறக்கம் செய்து பார்ப்பதை வார இறுதி வாடிக்கையாகவே வைத்திருந்தேன்(கேர்ள் ஃப்ளிக்ஸ்-காதலை மையப்படுத்தி அல்லது பெண்களை மையப்படுத்தி மொத்தத்தில் பெண்களால் இரசிக்கப்படும் ஆண்களால் அசட்டை செய்யப்படும் படங்கள்).எல்லா படங்களும் பார்த்தாகிவிட்ட ஒரு நல்லநாளில் ஈடியை தரவிறக்கினேன்.(அழகாக இருக்கிறது இந்த வார்த்தை!)
ஒரு அயல்கிரகவாசி பூமியில் தவறுதலாக தனித்துவிடப்படுகிறது(நெருக்கம் கருதி அஃறிணை).Elliot தந்தையை பிரிந்த தாயால் வளர்க்கப்படும் சிறுவன்.சதா அண்ணன் அவனை எஜமானத்தனம் செய்கிறான் சரியாக சொல்வதென்றால் அண்ணன் மற்றும் அவன் நண்பர்களிடம் ஒப்புக்கு சப்பாணியாக இருக்கிறான்.சிறுவயதில் மாயாஜாலக் கதைகளில் ஈர்ப்பு வருகையில் நமக்கு பிடித்த எதிர்வாதம் புரியாத பொருளை நண்பர்களாக வரித்துக்கொள்வோம்.சிலருக்கு மரப்பாச்சி,சிலருக்கு கடவுள்,சிலருக்கு இறந்துபோன உறவுகள்,சிலருக்கு கற்பனை கதாபாத்திரங்கள்.இயக்குநர் ஸ்பீல்பெர்க்குக்கு ஒரு அயல்கிரகவாசி.சிறுவனாக வரும் எலியட்டின் கதாபாத்திரத்தில்கூட ஸ்பீலின் குணாதசியம் தெரிவதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. எலியட்டின் தங்கையாக வரும் சிறுமி யாரிடம் எதை சொல்லக்கூடாதோ அதை மிகச் சரியாகத் செய்கிறாள்.துடுக்குத்தனம் நிறைந்த சிறுமி.அவளது முகபாவங்கள் கொஞ்சுதற்குரியவை.படத்தில் புன்னகை வரும் இடங்களில் இவள் கட்டாயம் இருப்பாள்.மூத்தவன் பொறுப்பு நிறைந்தவன்,தாய் அழும்போது தம்பியிடம் , “நீ ஏன் கொஞ்சம் முதிர்ச்சியோடு அனைவரையும் புரிந்து கொள்ள முயற்சிக்கக்கூடாது?” என சீறுபவன்.தமிழ் சினிமா காவலர்கள் போல் கட்டகடைசியில் வீட்டிலேயே வலம்வரும் ஈடியை அறிந்துகொள்ளும் அன்னை.ஈடி இந்த குடும்பத்தில் பிரவேசிப்பதும், அவர்களுடன் நட்பு உருவாக்குவதும்,பிரியும்போது கசியும் ஈரமும்தான் படம்.
சிறுவனுக்கு அயல்கிரகவாசியை பார்த்ததும் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டாலும் அதுவும் அவனைக்கண்டு பயப்படவே அதைத் தேடத் தொடங்குகிறான்.கிடைத்ததும் அனைத்தையும் பகிரத்தொடங்குகிறான்.ஈடியை அனைவரையும் விட சரியாக புரிந்துகொள்பவன் இவனே. உண்மையில் தனிமையை உணர்ந்தவர்களாலேயே மற்றவர்களின் துயரத்தில் தன்னை பொறுத்திக்கொள்ள முடியும்.ஈடிக்கும்,எலியட்டுக்கும் உள்ள தொடர்பு தெரியவரும்போது ஆய்வாளர், “You say Elliot thinks his thoughts?” என கேட்கிறார்.அதற்கு அவன் அண்ணன், “No He feels his feelings”, என்கிறான்.சிந்தனைகளுக்கும்,உணர்வுகளுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் புரிகிறது.
படத்தின் மிகப்பெரிய வெற்றி ஒரு மனிதனின் பாவனைகள்போல் ஈடியின் பாவனைகளும் நம்மை ஆக்கிரமிப்பது.அதற்கு வலிக்கும்போது நமக்கும் வலிக்கிறது.உருவத்தில் அளவில் நிறத்தில் நம்மோடு வேறுபடும் ஈடியை பெரியவர்களைவிட சிறுவர்களாலேயே நெருக்கமாக உணர முடிகிறது.வயதானால் சந்தேகம் வலுக்கிறது.ஆராயத் தோன்றுகிறது.ஈடியோடு எளிமையாக நட்பு பாரட்ட முடிகிறது சிறுவர்களோடு, வளர்ந்தவர்களுக்கு மட்டுமே ஆராய்ச்சி செய்ய மனம் வருகிறது.ஈடிக்காக தான் பத்து வயதிலிருந்து காத்திருப்பதாக சொல்லும் உளவுத்துறை அதிகாரி காரியத்தால் எலியட்டோடு முரண்படுகிறார்.எலியட்டின் காத்திருப்பு நட்பைக் கோருகிறது,அதிகாரிக்கோ சாதனை,ஆராய்ச்சி,பைத்தியக்காரத்தனம்.
ஈடி வார்த்தைகள் கற்றுக்கொள்கிறது.மொத்தமே ஐந்துக்கும் குறைவான வார்த்தைகள், மனிதகுலத்திற்கு அவசியமான உபயோகப்படுத்தினால் அநாவசிய விவாதங்கள் குறையும் வார்த்தைகள்,படத்தின் இறுதிக்காட்சிகளில் அவை உபயோகப்படும்போது அழுத்தம் கூடுகிறது.வலியை உணரும்போது ஈடி சொல்லும் “ஔச்” இறுதியில் பிரியும்போதும் வருகிறது “ஔச்”.படத்தின் பின்னணி இசையும்,ஒளிப்பதிவும் பக்கா.இறுதியில் சைக்கிளில் சிறுவர்கள் செல்லும் காட்சியின் பின்னணி இசை ஸ்பீலுக்கு மிகவும் பிடித்திருந்ததால் இசைக்கேற்ப காட்சியை நீளப்படுத்திக்கொண்டாராம்.அதிரும் பின்னணி இசையில் ஆரஞ்சு சூரியன் முன்னே இறங்கும் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் யம கிங்கரர்களை நினைவூட்டுகிறார்கள்.
படத்தில் வரும் சைக்கிள்கள் கார்களை முந்துகின்றன.முடியுமாவென யோசித்தால் சைக்கிள்களால் கார்களை முந்த முடியாதென்னும் நினைப்புதான் நம்மில் பலரின் வாழ்நாள் அலுப்புக்கு காரணமென தோன்றுகிறது.இதில் வரும் காற்றில் பறத்தலும்,பறக்க வைத்தலும் சாத்தியமே - magnetic levitation,telekinesis.மனிதனின் விஞ்ஞானம் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே எல்லைகளுக்குள் திரிவது.இன்று நம்பமுடியாத ஒன்றுக்கு நாளை தேற்றங்கள் எழுதப்படலாம்,அதில் கடவுளும் ஒன்றாக இருக்கலாம்.ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என்பதைக்காட்டிலும் இந்த படம் சாரு சொன்ன “வாழ்வியல் தரிசனம்” என உணர்கிறேன்.எல்லா இடத்திலும் இருக்கும் தனித்திருப்பவனின் மீதான கேள்விகள்,கல்லெறிதல்களின் ஒரு பிரதியெனவே இப்படத்தைப் பார்க்கிறேன்.முடிவில் ஈடிக்கு சிறுமி முத்தமிடுகிறாள்,நமக்கும் முத்தமிடத் தோன்றுகிறது,ஈடி சொல்கிறது, “Be good”.சிறுவன் வானம் பார்க்கிறான்.பல காட்சிகளில் துளிர்த்த நம் கண்ணீரோடு படம் நிறைவடைகிறது.
இந்த படத்தைப்பற்றி இன்னும் விட்டால்கூட சொல்லிக்கொண்டேயிருப்பேன்.உங்கள் வேலை கெட்டுவிடும்,போய் படத்தைப்பாருங்கள்!
கண்டுபிடிப்பு- கில்லி பொம்மைகளுக்கு மத்தியில் த்ரிஷா இருக்கும் காட்சி இந்த படத்திலிருந்து சுட்டது.
நினைவூட்டல்-அஞ்சலி படத்தின் “வேகம் வேகம்” பாடலை மணிரத்னம் இந்த திரைப்படத்திற்கு மரியாதை செய்யும் விதமாய் அதைப்போலவே எடுத்திருப்பதாக சொல்கிறார்.
தகவல்- விக்கிதான் வேறாரு?!