இழவு விழுந்த வீடு
பெருங்குரலெடுத்து அழுதவர்களும், அழுதழுது ஓய்ந்தவர்களும், ஒய்ந்தவர்களுக்கு காபி கலந்தவர்களும் காபி கலந்து சலித்தவர்களும் கலகலக்கச் செய்திருந்தனர் சாவு வீட்டை. வெறிக்க வெறிக்க பார்த்திருந்தேன் நான் மட்டும் எல்லாவற்றையும். ஒரு சாபம் போல பிரிய மறுத்தன விழியை விட்டு உப்பு நீரும் உதட்டை விட்டு ஓலங்களும். புருசனை இழந்த தூரத்து அத்தையின் பார்வை அப்போதும் என் மேல் ஊர்ந்தது. நாளை என் சாவில் அத்தை எப்படி அழுவாள்? கோள் சொல்லி திட்டலாம் ஊசி தைத்த மனதோடு உதாசீனப்படுத்தலாம். இல்லை என்னை மன்னித்து கண்ணீரால் கழுவலாம். பிணத்தை எடுத்ததும் ஏனோ தோன்றியது, அறியாத வயசென்றால் எளிதாக அழ வாய்த்திருக்கும் எச்சிலைத் தொட்டேனும்.
அரசக்கட்டளை
நான் மரித்ததும் என்னை புதைக்காதீர்கள் நாடு முழுக்க என் சாம்பலை தூவுங்கள் ஏழை எளியோருடன் அது ஒன்றாகட்டும் சொல்லிவிட்டு செத்துப்போனார் எல்லோருக்கும் பிடித்தவர். எவனும் கேட்கவில்லை செத்தப்பறம் உனக்கென்ன கவலை அதைப்பற்றியென.
Advertisement
